indian-stamp-caldwell

இந்திய அரசாங்கம் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் தந்த ராபெர்ட் கால்ட்வெல் பாதிரியாரின் தபால்தலையை மே 7, 2010 அன்று வெளியிடுவதாக அறிவித்துள்ளது. அதற்கு முன்னரே திராவிட மொழிக் குடும்பக் கோட்பாடு அளித்தவர் ஃபரான்சிஸ் வைட் எல்லிஸ் ஆவார். எல்லிஸ் சிறுவயதில் நஞ்சுணவை உண்டு மாய்ந்ததால், நூல் எழுதவில்லை. 1856-ல் எல்லிஸ் தொடங்கிய பணியைக் கால்டுவெல் பாதிரியார் (மே 7, 1814 - ஆகஸ்ட் 28, 1891) தனிநூலாகச் செப்பமுடன் எழுதி வெளியிட்டார்.

திசையன்விளை அருகுள்ள இடையன்குடி என்ற வெப்பம் மிகுந்த ஊரில் 50 வருடங்கள் வாழ்ந்து கால்டுவெல் ஐயர் கிறிஸ்து சமயத்தைப் பரப்பினார். அந்தக் கிறித்துவ மிஷனரி தொண்டூழியம் பற்றிய விரிவான திரைப்படம்:


Bishop Robert Caldwell, A Comparative grammar of the Dravidian on South Indian Family of Languages - 1856. முதன்முதலாய் திராவிடர், திராவிட மொழிகள் எனத் தென்னிந்திய மொழிக்குடும்பத்தையும், அம்மொழிகள் பேசுவோரையும் குறிப்பிட்டவர் கால்டுவெல்லே.

கால்டுவெல் 19-ம் நூற்றாண்டில் த்ரவிட என்பது திரமிட என்றாகி அது பின்னர் த்ரமிள ஆகத் திரிந்து பின்னர் தமிள, தமிழ் என்று ஆனது என்றார். 100 ஆண்டு சென்றபின்னர் இதனை மறுத்து, தமிழ் என்பதே திரமிடம், திராவிடம் என்றானது என்று மொழியியல் அறிஞர் சுவெலபில் போன்றோர் எழுதினர். திராவிடம் என்பது தமிழைக் குறிக்கும் பெயரே என்பதைக் கால்டுவெல் கூறுகிறார். தமிழை மட்டும் குறிக்க தமிழ் என்னும் சொல்லையும், தமிழையும் அதன் கிளை மொழிகளான தெலுங்கு, கன்னடம், மலையாளம், போன்றவற்றையும் குறிக்க ‘திராவிடம்’ என்னும் சொல்லையும் தான் பயன்படுத்துவதாகத் தெளிவாகக் குறிப்பிடுகிறார்.(மேலது பக். 8). தமிழ் என்ற சொல்லுக்கான சமஸ்கிருதச் சொல் ‘திராவிட’ என்றும், அச்சொல் திராவிடர் என்று அழைக்கப்படும் மக்கள் வாழும் நாட்டையும், அவர்களது மொழியையும் குறிக்கும் என்றும் கால்டுவெல் குறித்தார். (மேலது பக். 12, கவிதாசரண் வெளியீட்டில் உள்ள பக்க எண்கள்).

மேலும் ஆராய,

Y. V. Kumaradoss,
Robert Caldwell, a scholar-missionary in colonial South India
Delhi : ISPCK, 2007

ரா. பி. சேதுப்பிள்ளை, கால்டுவெல் ஐயர் சரிதம்,
1936: ஹிலால் பிரஸ், நெல்லை
1964: பழனியப்பா பிரதர்ஸ்

Minatcicuntaram, Ka.,
Contribution of European scholars to Tamil
University of Madras, 1974 (Tamil translation: 2003).

எல்லீசன் என்றொரு அறிஞன் - ஆ.இரா. வேங்கடாசலபதி
http://www.kalachuvadu.com/issue-89/varalaru.asp

கால்டுவெல் என்ற மனிதர் - தொ. பரமசிவன்
http://www.keetru.com/maatruveli/nov08/tho_paramasivan.php

கால்டுவெல்: பின்காலனிய வாசிப்பு - அ. மங்கை
http://www.keetru.com/maatruveli/nov08/a_mangai.php

கால்டுவெல் என்னும் சிக்கல் - எம். வேதசகாய குமார்
http://www.keetru.com/maatruveli/nov08/vedhasakayakumar.php

கால்டுவெல்லின் திராவிடம்: ஒரு வாசிப்பு -வ. கீதா
http://www.keetru.com/maatruveli/nov08/Va_Geetha.php

M.S.S. Pandian, Non-Brahmin: Genealogies of the Tamil Political Present, Delhi, 2007.

http://muelangovan.blogspot.com/2007/04/1814-1891.html

2009 கிறிஸ்துமஸ் தினத்தன்று முதல்வர் கருணாநிதி தமிழைச் செம்மொழி ஆக்கும் திருப்பணியைத் துவக்கிய கால்டுவெல்லையும், பின்னர் கரந்தைத் தமிழ்ச் சங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகளையும் பற்றி முரசொலியில் எழுதியுள்ளார்.

அறிக்கை:

தமிழ்மொழி செம்மொழியென முதல் குரல் கொடுத்த தமிழர் பரிதிமாற் கலைஞர் என்றால்; தமிழ்மொழி செம்மொழியென்று முதலில் சொன்ன வெளிநாட்டவர் அறிஞர் ராபர்ட் கால்டுவெல் ஆவார்.

பரிதிமாற் கலைஞர் தமிழ்மொழி செம்மொழியென 1887-ம் ஆண்டு குரல் கொடுத்ததற்கு 30 ஆண்டுகளுக்கு முன்பே, 1856-ம் ஆண்டு அறிஞர் கால்டுவெல், தாம் எழுதிய "திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற ஒப்புவமை காண்பித்திட இயலாத, உயர்பெரும் நூலில், "திராவிட மொழிகள் அனைத்திலும், உயர் தனிச் செம்மொழியாய் நிலைபெற்று விளங்கும் தமிழ், தன்னிடையே இடம் பெற்றிருக்கும் சமஸ்கிருதச் சொற்களை அறவே ஒழித்துவிட்டு உயிர் வாழ்வதோடு அவற்றின் துணையை ஒருசிறிதும் வேண்டாமல் வளம் பெற்று வளர்வதும் இயலும்.

செந்தமிழ் என்றும் தனித்தமிழ் என்றும் சிறப்பிக்கப் பெறுவதும், பெரும்பாலும் அம்மொழி இலக்கியங்கள் அனைத்தையும் எழுதப் பயன்படுவதுமாகிய பழந்தமிழ் அல்லது இயல்தமிழ், மிக மிகக் குறைந்த சமஸ்கிருதத் தொடர்பையே பெற்றுள்ளது.

சமஸ்கிருதச் சொற்களையும், எழுத்துக்களையும் மேற்கொள்வதை வெறுத்து ஒதுக்கிவிட்டு; பழந்திராவிட தனிச்சிறப்பு வாய்ந்த மூலங்கள், சொல்லுருவங்கள், ஒலி முறைகளை மட்டும் மேற்கொள்வதில் காட்டும் ஆர்வத்தையும் விழிப்புணர்ச்சியையும் விடாமல் மேற்கொண்டிருப்பதினாலேயே அச்செந்தமிழ், தன் மொழியின் உரைநடை, பேச்சு நடைகளோடு சிறப்பாக வேறுபடுகிறது என்று தமிழ்மொழி செம்மொழியே எனச் சான்றாதாரங்களோடு நிரூபித்துக் காட்டினார்.

அறிஞர் கால்டுவெல்லின் ஆழ்ந்த ஆராய்ச்சி அடிப்படையிலான நூல்கள் தமிழகத்தில் பிராமணர் அல்லாதார் இயக்கத்திற்கு ஊக்கமளிப்பதாக அமைந்தன. தமிழ், தமிழர்தம் நாகரிகம், பண்பாடு ஆகியவற்றில் அவர் கொண்டிருந்த பற்றின் அடிப்படையிலேதான், அண்ணா இரண்டாம் உலகத்தமிழ் மாநாட்டின்போது, அவரது திருவுருவச் சிலையைச் சென்னை மெரினா கடற்கரையில் நிறுவிடச் செய்தார்.

தென்னிந்தியத் திருச்சபையினர் வழங்கிய ராபர்ட் கால்டுவெல் திருவுருவச்சிலை, 2.1.1968 அன்று, அன்றைய தமிழக மேலவைத் தலைவர் எம்.ஏ.மாணிக்கவேலர் தலைமையில், பன்மொழிப் புலவர் கா.அப்பாத்துரையாரால் திறந்து வைக்கப்பட்டது.

தமிழ்மொழி செம்மொழியேயென அறுதியிட்டு உறுதியாக சைவ சித்தாந்த மகா சமாஜம் 1918-ம் ஆண்டிலேயே நிறைவேற்றிய தீர்மானம் தமிழ் ஆர்வலர்களாலும், அன்பர்களாலும் மிகுந்த மகிழ்ச்சியோடும், நிறைவோடும் நினைவு கூரத்தக்கதாகும்.

பச்சையப்பன் கல்லூரியில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தைப் பற்றி, தனித்தமிழ் அறிஞர் மறைமலையடிகளார் 12.3.1918-ந் தேதி பற்றிய தமது நாட்குறிப்பில், "தமிழைச் செம்மொழியாக ஏற்றுக் கொள்ளவேண்டும் என்று அரசாங்கத்திற்கு விண்ணப்பம் விடுப்பதற்குப் பச்சையப்பன் கல்லூரியில் 15-ம் நாள் (15.3.1918) நடக்கவிருக்கும் கூட்டத்தில் என்னை உரையாற்றுமாறு, கா.சுப்பிரமணிய பிள்ளை எம்.ஏ., எம்.எல்., வேண்டினார்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

தஞ்சை-கரந்தைத் தமிழ்ச் சங்கம், செம்மொழி வரலாற்றிற்கு வழங்கியுள்ள மிகச்சிறப்பான பங்களிப்பு போற்றத்தக்கது மட்டுமல்ல; புவியில் வாழும் நாள்வரை தமிழர்களால் மறக்கவொண்ணாததுமாகும். த.வே.ராதாகிருஷ்ணப் பிள்ளை உள்ளிட்ட தமிழ் ஆர்வமும், தமிழ்ப் பயிற்சியும் உடையோர் சிலரால் 1911-ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட கரந்தைத் தமிழ்ச் சங்கம்; தொடங்கிய காலம் முதல் தமது வாழ்நாள் இறுதிவரை அதன் தலைவராக இருந்து அரும்பணியாற்றியவர் தமிழறிஞர் த.வே.உமாமகேசுவரம் பிள்ளை ஆவார். அதனால் தான், 18.2.2006 அன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் - கலைஞர் அரங்கில் நடைபெற்ற தமிழவேள் உமாமகேசுவரனார் அஞ்சல்தலை வெளியீட்டு விழாவில் நான் உரையாற்றியபோது:

"உமாமகேசுவரனார் பெயர் இன்று மற்ற அறிஞர்களைவிட அதிகமாக நினைவுக்கு வரவேண்டிய காலகட்டம் இது. காரணம் தமிழ்ச் செம்மொழி என்று எண்ணினால், பரிதிமாற் கலைஞருக்கு அடுத்து, நம் நினைவுக்கு வருகிற பெயர் தமிழவேள் உமாமகேசுவரனாரின் பெயர்தான். அவர்தான் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் தமிழ், செம்மொழியாக ஆக்கப்படவேண்டும் என்ற தீர்மானத்தை இயற்றியவர். இல்லையேல், தமிழ் செம்மொழியாவதற்கு எந்த ஆதாரத்தை வைத்து நாம் மத்தியிலே இருக்கின்ற அரசோடு பேச முடிந்தது?'' - என்று கரந்தை உமாமகேசுவரனாரின் அருமை பெருமைகளுக்கு அணி செய்தது எனது நினைவில் அழுத்தமாக அச்சியற்றப் பெற்றிருக்கிறது.

தஞ்சை - கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் ஏழு-எட்டாம் ஆண்டுகளுக்கான விழா, 24.5.1919 மற்றும் 25.5.1919 ஆகிய நாட்களில் திருக்கோவிலூர் ஆதீனம், திருப்பாதிரிப்புலியூர் திருஞானியார் மடத்தின் தலைவர் சிவசண்முக மெய்ஞ்ஞான சிவாச்சார்ய சுவாமிகள் தலைமையில், தமிழவேள் த.வே.உமாமகேசுவரம் பிள்ளை, தமிழறிஞர் வேங்கடசாமி நாட்டார், டி.என்.குருமூர்த்திப் பிள்ளை, டி.கூரத்தாழ்வார் முதலியார் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

அவ்விழாவில், "தமிழ்மொழியானது தொன்மையும், சீர்மையும், செம்மையும் வாய்ந்து விளங்குகின்ற ஓர் உயர்தனிச் செம்மொழியென உறுதிப்பட பலதிறத்தாராலும் ஏற்றுக் கொள்ளப்படுவதால், சென்னைப் பல்கலைக் கழகத்தார் தாம் இதுகாறும் கொண்டிருந்த கொள்கையை மாற்றித் தமிழ்மொழி, ஓர் உயர்தனிச் செம்மொழியே என்பதை ஒப்புக் கொண்டு, இத்தென்னாட்டுப் பல்கலைக்கழகத்தில் அதற்கு முறைப்படி முதலிடமும், உரிமைகளும் கொடுக்க வேண்டும்'' என்று வற்புறுத்தித் தீர்மானம் இயற்றப்பட்டது.

22.9.1923 மற்றும் 23.9.1923 ஆகிய நாட்களில் தமிழ் வள்ளல் சா.ராம.மு.சித. பெத்தாச்சி செட்டியார் தலைமையில் நடைபெற்ற கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் பன்னிரெண்டாவது ஆண்டு விழாவில், "உலகத்து உயர்தனிச் செம்மொழிகளில், முதல் மொழியெனக் கருதப்படுவதற்குரித் தான எல்லா இலக்கணமும் தமிழ் மொழி உடையதாயிருப்பதால், அதனை அத்தகை மொழியாக ஆட்சியாளர் கருதி ஐ.சி.எஸ். பட்டத்திற்கு அதனை ஒரு பாடமாக ஏற்றுக் கொள்ள வேண்டுமென்று இந்திய அரசியலாரை வற்புறுத்திக் கேட்டுக் கொள்ளப்படுகிறது'' எனும் தீர்மானம் இயற்றப்பட்டது.

1938-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15, 16, 17 ஆகிய நாட்களில் நடைபெற்ற கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் வெள்ளி விழாவிற்குத் தலைமையேற்ற திருப்பாதிரிப்புலியூர் ஞானியார் அடிகள் தனது உரையில், "இத்தகைய பெருமையும், இனிமையும் உடைய தமிழை உயர்தனிச் செம்மொழி என்ற நிலையில் அரசியலார் போற்றாதிருப்பது கவலத்தக்க தாகும்'' என்று தனது ஆழ்ந்த வருத்தத்தை வெளியிட்டார்.

இவ்வாறு கரந்தைத் தமிழ்ச் சங்கம் தமிழவேள் உமாமகேசுவரனார் தலைமையில் தொடக்கக் கட்டத்தில்; தமிழ், செம்மொழியென அரசியல் நிலையில் அங்கீகரிக்கப்பட்டு உரிய முறையில் சிறப்பு செய்யப்படவேண்டும் என்பதற்கு ஆற்றிய பணி அளவிடமுடியாததாகும். செம்மொழி வரலாற்றில் கரந்தைத் தமிழ்ச் சங்கம் ஆற்றல் மிக்கதோர் அத்தியாயமாக இடம் பெற்றுள்ளது என்று கூறியுள்ளார் கருணாநிதி.

கிறித்துமசு வாழ்த்துச் செய்தி (24. டிச. 2009):

சென்னை, டிச.24 பொறுமையைப் போதித்த இயேசு நாதரின் அடிச்சுவட்டில் வாழும் கிறித்தவ சமுதாய மக்களுக்குத் தனது உளமார்ந்த கிறிஸ்துமஸ் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்வதாக முதலமைச்சர் கருணாநிதி குறிப்பிட்டுள்ளார்.

முதலமைச்சர் கருணாநிதி விடுத்துள்ள கிறிஸ்துமஸ் வாழ்த்துச் செய்தி:

இயேசு பெருமான் பிறந்த திருநாள் ஆண்டுதோறும் டிசம்பர் திங்கள் 25 ஆம் நாள் கிறிஸ்துமஸ் திருநாளாகக் கிறித்தவ சமுதாய மக்களால் மிகுந்த மகிழ்ச்சியோடு கொண்டாடப்படுகிறது.

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு, வரும் ஜூன் திங்கள் 23 ஆம் நாள் முதல் 27 ஆம் நாள் வரை 5 நாள்கள் கோவையில் கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டு, ஆயத்தப் பணிகள் நடைபெற்றுவரும் வேளையில், கிறித்தவ சமயத்தைப் பரப்பிடும் நோக்கில் ஐரோப்பிய நாடுகளிலிருந்து தமிழகம் வந்த குருமார்கள் பலர் ஆற்றிய தமிழ் வளர்ச்சிப் பணிகள் நினைவில் எழுகின்றன. அவ்வகையில், 1606இல் இத்தாலி நாட்டிலிருந்து வந்து, தமிழ்த் துறவியாக வாழ்ந்து, `தத்துவ போதகர்’ எனத் தம் பெயரையே மாற்றிக் கொண்டு தொண்டாற்றி, தமிழ் உரைநடையைச் செப்பம் செய்த இராபர்ட் டி. நொபிலி!

அதே இத்தாலியிலிருந்து 1700இல் வந்து, கிறித்துவத் தொண்டுகளுடன் தமிழ் வளர்ச்சிப் பணிகளாக, “தேம்பாவணி,” “சதுரகராதி” முதலிய நூல்கள் பல படைத்த வீரமாமுனிவர்! 1709இல் ஜெர்மன் நாட்டிலிருந்து வந்து, தரங்கம்பாடியில் முதன்முதல் அச்சுக்கூடம் நிறுவி, பொறையாறில் இந்தியாவிலேயே முதன் முதலாகக் காகித ஆலையையும் நிறுவி, தமிழ் - இலத்தீன் அகராதி, பைபிள் தமிழ் மொழிபெயர்ப்பு முதலான தமிழ் நூல்கள் பல கண்ட சீகன் பால்க்!

இங்கிலாந்து நாட்டிலிருந்து, 1839இல் தமிழகம் வந்து சமயப் பணிகளாற்றி, திருக்குறள், திருவாசகம், நாலடியார் ஆகியவற்றை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்ததுடன், இங்கிலாந்து திரும்பிச் சென்ற பின் அங்கு ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி மேனாட்டினருக்குத் தமிழின் சிறப்பைப் புலப்படுத்தி, தமிழ் மொழி மீது கொண்ட காதலால், “நான் ஒரு தமிழ் மாணவன்” எனத் தம் கல்லறையில் எழுதச் செய்த ஜி.யூ. போப்!

அயர்லாந்து நாட்டில் பிறந்து 1889இல் தமிழகம் வந்து, நெல்லைச் சீமையில் தங்கி, “திருநெல்வேலி சரித்திரம்” என்னும் ஆங்கில நூலுடன், திராவிட மொழிகளை ஆய்ந்து, “திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்” எனும் அரிய நூலைப் படைத்துத் தமிழ்மொழியின் மேன்மையை மேதினியில் நிலைநாட்டிய மேதை கால்டுவெல் போன்றோர் தமிழ்மொழி வளர்ச்சிக்கு ஆற்றிய அளப்பரிய தொண்டுகளெல்லாம் வரலாற்றில் நின்று நமக்கு எழுச்சியூட்டுகின்றன.

அக்கிறித்தவப் பெருமக்களை நன்றியோடு நினைவுகூர்ந்து, மண்ணில் மனிதநேயம் தழைக்க, “அடுத்தவனை நேசி; உன் எதிரியிடமும் அன்பு காட்டு; உன்னைச் சபிப்பவர்களை ஆசீர்வாதம் செய்; உன்னை வெறுப்பவர்களுக்கும் உதவி செய்; உன்னை அவமதிப்பவர்களையும் போற்று;” எனப் பொறுமையைப் போதித்த இயேசு நாதரின் அடிச்சுவட்டில் வாழும் கிறித்தவ சமுதாய மக்களுக்குத் தமிழக அரசின் சார்பில் எனது உளமார்ந்த கிறிஸ்துமஸ் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்கிறேன்!

இவ்வாறு முதலமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.

0 comments: